எதியூரப்பா அரசு தப்புமா?, கலைப்பா?: உயர் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் முடிவாகும்
5 சுயேச்சைகள், 11 பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை கர்நாடக சட்டசபை சபாநாயகர் போபய்யா டிஸ்மிஸ் செய்து முதல்வர் எதியூரப்பா அரசை நேற்று காப்பாற்றினார்.
இந்த சஸ்பெண்ட்டை எதிர்த்து இந்த 16 எம்எல்ஏக்களும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நேற்றே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது பாஜக அரசுக்கு ஆதரவாக முன்னாள் செலிசிட்டர் ஜெனரல் சோலி சோராப்ஜி ஆஜராகி வாதாடினார். இதையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று நடக்கிறது.
இந்த எம்எல்ஏக்கள் நீக்கம் செய்யப்பட்டது சரியா தவறா என்பது குறித்து நீதிமன்றம் இன்றே தீர்ப்பளிக்கும் என்று தெரிகிறது.
இதனால் இந்த வழக்கின் முடிவு தெரியும் வரை ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசும் முடிவு செய்துவிட்டது.
இந்த எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தால், எதியூரப்பா அரசு கவிழ்வது நிச்சயமாகும்.
இவர்களையும் சட்டசபையில் ஓட்டளிக்க அனுமதித்து, முறைப்படி வாக்குச்சீட்டு மூலம் அனைத்து எம்எல்ஏக்களையும் ஓட்டு போட வைத்து, மொஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டால், பாஜக அரசு கவிழும்.
அதே நேரத்தில் இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது சரிதான் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அரசு இப்போதைக்கு தப்பிவிடும்.
ஆனால், அப்படி ஒரு தீர்ப்பு வந்தால் கவர்னர் பரத்வாஜ் அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தலையிட்டு சட்டசபையை முடக்க முடியலாம்.
சட்டசபை கதவுகளை மூடி, எதிர்க் கட்சி எம்எல்ஏக்களையே உள்ளே நுழைய அனுமதிக்காமல், போலீசாரை வைத்து தடுத்து, வெறும் குரல் வாக்கெடுப்பு மூலம் அரசுக்கு 106 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக சபாநாயகர் போபய்யா அறிவித்து எதியூரப்பா அரசை நேற்று காப்பாற்றினார்.
இதையடுத்து போலீசாரை தாக்கிவிட்டு உள்ளே நுழைந்த எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் நாற்காலிகளை தூக்கி வீசியும் சட்டசபை ஜன்னல்களை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும் பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் பித்ரி தனது போலீஸ் உடையில், துப்பாக்கியுடன் சட்டசபைக்குள் வந்து, எதிர்க் கட்சியினரை உள்ளே நுழைய விடாமல் தடுத்தார். இதனால், இந்த வாக்கெடுப்பே சட்ட விரோதமானது என்று மத்திய அரசுக்கு கவர்னர் பரத்வாஜ் அறிக்கை அனுப்பியுள்ளார்.
இதனால் சட்டசபையை முடக்கி விட்டு, உடனே ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குமாறும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
இது குறித்து நேற்றிரவு கூடிய காங்கிரஸ் உயர் மட்டக் கூட்டத்தில் விவாதி்க்கப்பட்டது. பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் தாக்கல் செய்துள்ள வழக்கின் மீது பெங்களூர் உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று அதில் முடிவு செய்யப்பட்டது.
இந்த விஷயத்தில் அவசரப்படத் தேவையில்லை என்றும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இன்றைய தீர்ப்பை பார்த்துவிட்டு, பின்னர் மத்திய அமைச்சரவையைக் கூட்டி கர்நாடக சபாநாயகரின் பரிந்துரையை அமலாக்குவது குறித்து முடிவெடுக்கலாம் என்று காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது.
இதற்கிடையே பாஜக அரசுக்கு ஆதரவாக உள்ள எம்எல்ஏக்களை இன்று டெல்லிக்கு அழைத்துச் சென்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் முன் நிறுத்த முதல்வர் எதியூரப்பா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மூத்த பாஜக தலைவர் அத்வானியின் இல்லத்தில் அக் கட்சியின் உயர் மட்டக் குழுக் கூட்டம் நடக்கிறது.
அதே போல இந்த விவகாரம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியும் கர்நாடக காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்துள்ளது.