ஜனாதிபதி ஆட்சி விவகாரம்: எதியூரப்பாவை ஆதரிப்பாரா கருணாநிதி?
பெங்களூர்: கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குவதை எதிர்க்க தமிழக முதல்வர் கருணாநிதியின் ஆதரவையும் கோரப் போவதாக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் எம்எல்ஏக்களுடன் டெல்லிக்குக் கிளம்பிய எதியூரப்பா நிருபர்களிடம் பேசுகையில்,
நாங்கள் இன்று எங்கள் ஆதரவு எம்எல்ஏக்களுடன் டெல்லி செல்கிறோம். அங்கு இன்றும், நாளையும் தங்கி இருப்போம்.
பாஜக தலைவர்களுடன் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது என வற்புறுத்துவோம்.
இது தொடர்பாக பாஜக ஆளும் 8 மாநிலங்களின் முதல்வர்களும் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளோம். கர்நாடகத்தில் கவர்னர் பரத்வாஜ் ஜனாதிபதி ஆட்சிக்கு சிபாரிசு செய்ததுள்ள பிரச்சனை குறித்து அதில் விவாதிக்கப்படும்.
இது ஒரு தேசிய விவகாரமாகும். ஜனாதிபதி ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களின் ஆதரவையும் திரட்ட போகிறேன். இதற்காக மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா, தமிழக முதல்வர் கருணாநிதி போன்றவர்களின் ஆதரவை கேட்பேன் என்றார்.
எந்த மாநிலத்திலும் ஆட்சியைக் கலைப்பதையும், ஜனாதிபதி ஆட்சியை அமலாக்குவதையும் திமுக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கும் அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை நீக்க வேண்டும் என்று திமுக நீண்டகாலமாக கோரி வருவதும் குறிப்பிடத்தக்கது.
எம்எல்ஏக்கள் பதவி நீக்கம்-கருத்து கூற கருணாநிதி மறுப்பு:
இதற்கிடையே நேற்று கர்நாடக சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக நடந்த வாக்கெடுப்புக்கு முன் பாஜக அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் போபய்யா தகுதி நீக்கம் செய்தது குறித்து கருத்துத் தெரிவிக்க முதல்வர் கருணாநிதி மறுத்துவிட்டார்.
இது குறித்து ஒரு ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில், கர்நாடக சட்டசபையில் நேற்று நடந்த சம்பவங்கள் ஜனநாயகத்தை நம்புவோரின் இதயங்களில் வலியை உண்டாக்கியுள்ளதாகவும், சட்டசபையில் எதுவுமே ஜனநாயகப்படி தான் நடக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்றார்.
அதே நேரத்தில் 11 பாஜக எம்எல்ஏக்களையும் 5 சுயேச்சை எம்எல்ஏக்களையும் சபாநாயகர் டிஸ்மி்ஸ் செய்துவிட்டு ஓட்டெடுப்பு நடத்தியது குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இதன்மூலம் எதியூரப்பா மீதான தனது தனிப்பட்ட அன்பை அவர் வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications