தமிழக அரசின் செயல்பாடுகளை பின்பற்றும் கேரள அரசு
திருவனந்தபுரம் : தமிழ்நாட்டு அரசின் செயல்பாடுகளை கேரள அரசு பின்பற்றிவுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் திமுக அரசு அமல்படுத்தி வரும் பல திட்டங்களை கேரளாவும் அமல்படுத்தவுள்ளதாம்.
தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்ட பின் சமத்துவபுரங்கள், உழவர் சந்தைகள், இலவச வீடுகள், இலவச எரிவாயு இணைப்பு என ஏராளமான சலுகை மழையில் தமிழக மக்களை நனைய விட்டு அனைத்தும் இலவசம் என்ற இலக்கை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது தமிழகம்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்று எம்.ஜி.ஆர். அன்று கேட்டார். அதையே மாற்றி என்ன இலவசம் இல்லை இந்த தமிழ்நாட்டில் என்று கேட்க வைத்திருக்கிறது திமுக அரசு.
தற்போது தமிழகத்தில் திமுக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பல்வேறு மாநிலங்கள் பின்பற்ற தொடங்கியுள்ளன. அதில் கற்றோர்கள் வளம்மிக்க தேசம் என்று கூறப்படும் கேரளாவும் இணைந்துள்ளது.
இம்மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 23, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பொது தேர்தலும் நடைபெற உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு வாக்கு வங்கிகளை தக்க வைக்கவும், ஆட்சியைத் தொடரவும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்து தமிழகத்தை போல் கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் உழவர்சந்தையை ஏற்படுத்தியது.
மேலும் ஆதி திராவிட ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச வீடுகளை காங்கீரிட் வீடுகளாக மாற்றி கட்டி கொடுக்க உள்ளது. மேலும், தமிழகத்தை போல் கிராமங்களில் பணிபுரிய மறுக்கும் மருத்துவர்களின் சான்றிதழ், சொத்து போன்றவைகளை பறிமுதல் செய்யவும், மருத்துவ கவுன்சில் பதிவெண்ணை ரத்து செய்து அரசு மருத்துவருக்கு படிக்கும் காலத்தில் வழங்கிய உதவிகளை திரும்ப செலுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கேரளாவில் இடதுசாரி ஆட்சியின் அதிரடி நடவடிக்கை மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதை எதிர்த்து எதிர்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. உள்ளாட்சி தேர்தலின் முடிவுக்கு பின் முழுமையாக இத்திட்டம் மற்றும் சட்டம் குறித்து சாதக, பாதகங்கள் தெரிய வரும்.