கிராமங்களில் செல்வாக்கு அதிகரித்துள்ளது-சட்டசபைத் தேர்தலில் திமுகவே வெல்லும்: சர்வே

நகர்ப்புறங்களில் திமுக செல்வாக்கு குறைந்தது:
இதுகுறித்து தமிழ்நாடு பிராந்திய பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் கே.கனகராஜ் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள் 2 ஆயிரம் பேர், தமிழகம் முழுவதும் நேரடியாக சென்று பொதுமக்களை சந்தித்து, கருத்துக்கணிப்பு நடத்தினார்கள். கருத்துக்கணிப்புப்படி, கிராமப்புற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணிக்கு செல்வாக்கு அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புறங்களில் செல்வாக்கு குறைந்துள்ளது.
அதிமுகவுக்கு வாக்களிக்கும் மன நிலையில் வாக்காளர்கள்:
மேலும், தி.மு.க. 5 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டது, அதனால் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தால் என்ன? என்ற எண்ணம் நகர மக்கள் மத்தியில் அரும்புகிறது. தனிநபர் செல்வாக்கு என்று எடுத்துக் கொண்டால் முதல்வர் கருணாநிதிக்குத்தான் முதல் இடம் கிடைக்கிறது.
அதிமுக வாக்குகள் அதிகரித்துள்ளன:
அதே நேரத்தில், அ.தி.மு.கவுக்கு 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும், 2009ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் வாக்குகள் சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாமக நிலை படு மோசம்:
இன்றைய நிலவரப்படி, தி.மு.க. கூட்டணிக்கு 42.59 சதவீத வாக்குகளும், அ.தி.மு.க கூட்டணிக்கு 41.15 சதவீத வாக்குகளும், தே.மு.தி.கவுக்கு 7.02 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பா.ம.கவுக்கு 4 சதவீதத்திற்கும் குறைவான அளவு வாக்குகளே கிடைக்கும்.
திமுகவின் பலம் டிவி-கேஸ்-அரிசி:
தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க, இலவச கலர் டி.வி, சமையல் எரிவாயு இணைப்பு திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், ஒரு ரூபாய் அரிசி திட்டம், 100 நாள் வேலை திட்டம் ஆகியவை காரணமாக அமைகிறது.
அதே நேரத்தில், பெட்ரோல் விலை உயர்வு, மின் வெட்டு, விலைவாசி உயர்வு, அரசு நிர்ணயித்த விலையைவிட புரோக்கர்களிடம் அதிக கட்டணம் செலுத்தி மணல் வாங்கும் நிலை உள்ளிட்டவைகள் தி.மு.க கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களிக்க காரணமாகின்றன.
ஜெ. குற்றச்சாட்டுக்கள் எடுபடுகின்றன:
அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க காரணமாக, முதல்வர் கருணாநிதி அவரது குடும்பத்தினருக்கு அதிக அளவு அரசியல் பதவிகள் வழங்குகிறார் என்ற ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு படித்தவர்கள் மத்தியில் எடுபடுகிறது.
அ.தி.மு.கவின் கூட்டணி கட்சியினர் யாருமே மக்கள் மத்தியில் எடுபடாதவர்கள். கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் பொருந்தாத கூட்டணி என்று மக்கள் நினைக்கிறார்கள். இது அ.தி.மு.க கூட்டணியின் பலவீனத்திற்கு காரணம் ஆகும்.
காங்.குக்கு எதிராக மக்கள்:
மேலும், தமிழக மக்களிடம் காங்கிரசுக்கு எதிரான எண்ணம் அதிகமாகிக் கொண்டே வருவதால் அந்த வாக்குகள் அ.தி.மு.க கூட்டணிக்கு மாறும் நிலை உள்ளது.
இந்த கருத்துக்கணிப்பு தற்போதைய கூட்டணியை வைத்தே எடுக்கப்பட்டது. கூட்டணி மாறும் பட்சத்தில் வாக்கு சதவீதத்தின் அளவு மாறுபடும். 2வது கட்டமாக அடுத்த ஆண்டு (2011) பிப்ரவரி மாதம் கருத்துக்கணிப்பு நடத்த உள்ளோம் என்றார் கனகராஜ்.












Click it and Unblock the Notifications