நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பர்னாலா
நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் சுர்ஜித்சிங் பார்னலா இன்று நெல்லைக்கு வந்துள்ளார். இதையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா இன்று காலை 11 மணிக்கு நடந்தது. விழாவிற்கு ஆளுநர் சுர்ஜித் சி்ங் பர்னாலா தலைமை வகித்தார்.
இதில் உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான பொன்முடி, இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜசேகரன் பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். நெல்லை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சபாபதி மோகன் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 26 ஆயிரத்து 946 பேர் பட்டம் பெற்றனர். இதில் 402 பேர் நேரடி பட்டத்தை பெற்றனர். 123 பேர் சிறப்பு பதக்கங்களை பெற்றனர்.