2வது நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட்ட ஆளுநர் மீது காங்., கெளடா கட்சி கடும் காட்டம்
நேற்று மாலை காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர்கள் ஆளுநர் பரத்வாஜை நேரில் போய் பார்த்து இதுகுறித்த தங்களது ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த இரு கட்சி தலைவர்களின் முகங்களும் கடும் கோபத்துடன் காணப்பட்டன.
குறிப்பாக கடும் சிரமப்பட்டு அதிருப்தி பாஜக எம்.எல்.ஏக்களை தன் பக்கம் வளைத்து வைத்திருந்த குமாரசாமிதான் கடும் அதிருப்தியுடன் காணப்பட்டார். அவர் கூறுகையில், 2வது நம்பிக்கை வாக்கெடுப்பை கைவிடுமாறு ஆளுநரிடம் நேரில் வலியுறுத்தினோம். அது முடியாவிட்டால், உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியாகும் வரையாவது தள்ளிப் போடுமாறும் கேட்டுக் கொண்டோம். ஆனால் அதை ஆளுநர் கேட்கவில்லை.
ஆளுநரின் இந்த வினோதமான முடிவுக்கு தடை விதிக்க கோர்ட்டை அணுகுவது குறித்து பரிசீலித்து வருகிறோம். அரசை டிஸ்மிஸ் செய்யுமாறு இதே ஆளுநர்தான் பரிந்துரைத்தார். பிறகு எப்படி இன்னொரு நம்பிக்கை வாக்கெடுப்பை அவர் அறிவிக்க முடியும் என்று தெரியவில்லை என்றார் குமாரசாமி கடுப்புடன்.
இதற்கிடையே, ஆளுநர் பரத்வாஜின் செயல்பாடுகள் அவருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. கர்நாடகத்தில் அரசியல் சட்டம் சீர்குலைந்து விட்டது, பேராபத்தில் இருக்கிறது, இந்த ஆட்சி நீடிக்கக் கூடாது என்று கடும் வார்த்தைகளால் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பிய பின்னர் மெஜாரிட்டைய நிரூபியுங்கள் என்று பாஜக அரசுக்கு 2வது வாய்ப்பை அவர் அளித்துள்ளது பெரும் முரண்பாடாக உள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்களுடன் சோனியா ஆலோசனை:
இந் நிலையில் கர்நாடக விவகாரம் குறித்து நேற்று காங்கிரஸ் உயர்மட்டக்குழு கூடி ஆலோசனை நடத்தியது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, ஏ.கே. அந்தோணி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் இறுதி முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் இன்று சோனியா காந்தி கர்நாடக மேலிட பார்வையாளரும் மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத், கர்நாடக முன்னாள் முதல்வரும் சட்ட அமைச்சருமான வீரப்ப மொய்லி ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய் சிங், பிரிதிவிராஜ் சவுகான், முகுல் வாஸ்னிக், கேசவ்ராவ் ஆகியோருடனும் சோனியா ஆலோசனை நடத்தினார்.