சென்னை,புதுச்சேரியில் எம்ஆர்எப் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
சென்னை: எம்ஆர்எப் ஊழியர்கள் மேற்கொண்ட ஸ்டிரைக்கைத் தொடர்ந்து அரக்கோணம் மற்றும் புதுச்சேரியில் உள்ள எம்ஆர்எப் ஆலைகளில் பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
புதுச்சேரியைச் சேர்ந்த தங்களது ஊழியர்கள் 2 பேரை நிர்வாகம் பொய்யான புகார்களைச் சுமத்தி சிறையில் அடைத்துள்ளதைக் கண்டித்தும், தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்காததைக் கண்டித்தும் இந்த ஸ்டிரைக் நடைபெறுகிறது.
எம்ஆர்எப் நிறுவனத்திற்கு தமிழகத்தில் 3 தயாரிப்பு ஆலைகளும், பிற மாநிலங்களில் மூன்றும் உள்ளன. இதில் தமிழகத்தில் அரக்கோணத்தில் ஸ்டிரைக் நடக்கிறது. புதுச்சேரியில் ஸ்டிரைக் நடக்கிறது. பிறநிறுவனங்கள் இயங்குகின்றன.
அரக்கோணம் தொழிற்சாலையில் பணி நிரந்தரம் செய்யப்பட்ட 800 பேர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.வழக்கமாக இங்கு மூன்றுஷிப்ட் அடிப்படையில் தினசரி 45,000 டயர்கள் உற்பத்தி செய்யப்படும். தற்போது அனைத்தும் நின்று போயுள்ளது.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் எம்ஆர்எப் நிறுவனத்தின் இதே இரு ஆலைகளிலும் ஸ்டிரைக் நடந்தது. இதனால் எம்ஆர்எப் நிறுவனத்திற்கு ரூ. 1000 கோடி இழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.