இந்தியா முழுவதும் 11 உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம்:
சென்னை: இந்தியா முழுவதும் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 11 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா கடந்த மாதம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிலரை மாற்ற வேண்டும் என்றும், அதற்குரிய பெயர்ப் பட்டியலைத் தயாரித்து அனுப்பும்படியும நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி அவர்களும் பெயர்ப்பட்டியலை தயாரித்து அனுப்பினர்.
இதையடுத்து முதற்கட்டமாக 11 நீதிபதிகளை இடமாற்றம் செய்வதாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் நேற்று ஆணை பிறப்பித்தது.
டெல்லி, அலகாபாத், ஆந்திரா, சென்னை, ஒரிசா, பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய 6 உயர் நீதிமன்றங்களில் பணிபுரிந்த 11 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணி புரிந்த நீதிபதி எம்.ஜெயபாலை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கும், அஙகிருந்த நீதிபதி வினோத்குமார் சர்மாவை சென்னைக்கும் மாற்றியுள்ளனர். வினோத் சர்மா வரும் 28-ம் தேதிக்குள் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி வினோத்குமார் சர்மா 1951-ம் ஆண்டு மே மாதம் 25-ம் தேதி பிறந்தார். அவரது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ஜலலாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர். நாக்பூரில் தனது சட்டக் கல்வியை முடித்துவிட்டு 1974-ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்தார்.
கடந்த 31 ஆண்டுகளாக பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் அதே உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
இவர் சிவில், தொழிலாளர், சர்வீஸ் வழக்குகளை கையாளுவதில் வல்லவர்.