கேரள உள்ளாட்சி தேர்தல்: பிளக்ஸ் போர்டுக்கு விதித்த தடை ரத்து
திருவனந்தபுரம்: கேரள உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது பிளக்ஸ் போர்டு வைக்க விதிக்கப்பட்ட தடையை அந்த மாநில உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது.
கேரளாவில் வரும் 23, 25 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஏராளமான பிளக்ஸ் போர்டுகளை வைத்தனர். இந்த போர்டில் கலந்துள்ள வேதிப் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதி்ப்பு ஏற்படும் என்பதால் அவற்றை பயன்படுத்தக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் திடீரென தடை விதித்தது.
இதை எதிர்த்து பிளக்ஸ் பிரிண்டிங் உரிமையாளர்களும், மூவாற்றுபுழா நகராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுதீசும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி செலமேஷ்வர், நீதிபதி ராமசந்திரமேனன் ஆகியோர் பிளக்ஸ் போர்டு பயன்படுத்த தேர்தல் ஆணையம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டனர்.
பிளக்ஸ் போர்டுக்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. அரசு அல்லது மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.