கொலை மிரட்டல் வழக்கில் காடுவெட்டி குரு நீதிமன்றத்தில் ஆஜர்
அரியலூர்: கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (35). பிரபல சாராய வியாபாரி. இவர் கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பு சாராய வியாபாரத்தை நிறுத்தி விட்டார்.
இதனையடுத்து தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் நலிந்தோர் மறுவாழ்வு நிதியை தனக்கு வாங்கித் தருமாறு வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவிடம் முறையிட்டார். இதற்கிடையே குணசேகரன் திடீரென அ.தி.மு.க. -வில் சேர்ந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த காடுவெட்டி குரு குணசேகரனை தரக்குறைவாக திட்டியதுடன், ஆயுதங்களால் தாக்கிக் கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகின்றது.
இது குறித்து வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு (50), படாநிலை ஊராட்சி தலைவர் நாகசுந்தரம் (45), பா.ம.க. நிர்வாகிகள் காமராஜ் (48), வீரப்பன் (37) ஆகிய நால்வர் மீது மீன்சுருட்டி போலீசார் கடந்த 2008-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.
இதற்கான குற்றப்பத்திரிக்கை ஜெயங்கொண்டம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு பெரம்பலூர் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கும், அதையடுத்து விசாரணைக்காக அரியலூர் விரைவு நீதிமன்றத்துக்கும் மாற்றப்பட்டது.
அரியலூர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்ட நால்வரும் ஆஜராகினர்.
பின்னர் விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.