ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆசிட்டில் விழுந்து லாரி டிரைவர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் ஆசிட்டில் விழுந்து லாரி டிரைவர் பலியானார்.
ஊத்துமலையைச் சேர்ந்த சுப்பையா மகன் கிருஷ்ணன். இவர் தூத்துக்குடியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 18-ம் தேதி துறைமுகத்தில் இருந்து ஆசிட் ஏற்றிக் கொண்டு சிப்காட்டில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்றார். அங்கு ஆசிட்டை இறக்கிக் கொண்டிருக்கையில் டேங்க் மீது ஏறி எவ்வளவு ஆசிட் இறக்கப்பட்டுள்ளது என்பதை பார்க்க முயன்றார்.
அப்போது தரையில் கொட்டிக் கிடந்த ஆசிட்டில் விழுந்தார். உடல் வெந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார். அவரது உடல் நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதை அறிந்த நாம் தமிழர் இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் டிரைவர் சாவில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலை கொண்டு செல்ல விடாமல் போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் தூத்துக்குடி டவுன் ஏ.எஸ்.பி. சோனால் சந்திரா, டி.எஸ்.பி. ஜெயக்குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசார் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.












Click it and Unblock the Notifications