திருப்பதியில் லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி, 3 பேர் படுகாயம்
திருமலை: திருப்பதி வெங்கடாசலபதி கோவில் அருகே நின்று கொண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தில் லாரி புகுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 8-ம் தேதி முதல் நடந்துகொண்டிருக்கிறது. இதில் கலந்து கொண்டு கடவுளை தரிசிப்பதற்காக ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அமலாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரராவ் (45) என்பவர் குடும்ப சகிதமாக திருப்பதிக்கு வந்தார்.
சுவாமி தரிசனம் எல்லாம் முடித்துவிட்டு நேற்று காலையில் ஊருக்கு செல்வதற்காக திருமலையில் உள்ள பாலாஜி பேருந்து நிலையத்தில் தன் குடும்பத்துடன் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது திருமலைக்கு வந்த மணல் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. லாரி வருவதைப் பார்த்த பக்தர்கள் அலறிக் கொண்டு நாலாபுறமும் ஓடினர். வெங்கடேஸ்வரராவ் தனது குடும்பத்தாருடன் சாலையின் நடுவில் இருந்த டிவைடரில் நின்றார். தாறுமாறாக ஓடிய லாரி டிவைடரை இடித்துத் தள்ளி வெங்கடேஸ்வரராவ் குடும்பத்தாரின் மீது ஏறியது. இதில் வெங்கடேஸ்வரராவ், அவரது மகன் மணி (7), மகள் துர்கா (3), உறவினர் வெங்கடரமணம்மாள் (55) ஆகிய 4 பேர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த சுரேஷ், லட்சுமி, கிருஷ்ணவேணி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் சேர்த்தனர்.












Click it and Unblock the Notifications