காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு 101 வாழ்த்துக்கள்-சச்சின்
டெல்லி: காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு 101 வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர்.
இந்தியா காமன்வெல்த் போட்டியில் 101 பதக்கங்கள் வென்றதையொட்டி இவ்வாறு 101 வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாக கூறியுள்ளார் சச்சின்.
இதுகுறித்து தனது ட்விட்டர் செய்தி மூலம் சச்சின் கருத்து தெரிவிக்கையில், நமது காமன்வெல்த் போட்டி சாம்பியன்கள் அனைவருக்கும் 101 வாழ்த்துக்கள். உங்களது கடின உழைப்பும், பல்வேறு தியாகங்களுமே இந்த பெருமையை நாடு அடைவதற்குக் காரணம். நீங்கள் எங்களைப் பெருமைப்படுத்தி விட்டீர்கள் என்று கூறியுள்ளார் சச்சின்.
அதேபோல சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் கருத்து தெரிவிக்கையில், நமது நாடு ஏற்றுக் கொண்ட மிகப் பெரிய பொறுப்பை (போட்டியை நடத்துவது) நாம் சிறப்பாக செய்துள்ளதாக கருதுகிறேன். அனைத்து காமன்வெல்த் நாடுகளிலும் 2வது வெற்றிகரமான நாடாக உருவெடுத்துள்ளது இந்தியா. இது சாதாரண சாதனை இல்லை.
இந்தப் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், குறிப்பாக பதக்கங்களை வென்ற சாம்பியன்களை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
வெல்டன் இந்தியா. இதே பலத்துடனும், திறமையுடனும் மேலும் பல உயரங்களை இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் எட்ட வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
நடிகர் மாதவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், விவரிக்க முடியாத பெருமை, பெருமிதம், மகிழ்ச்சியில் உள்ளேன். நிறைவு விழாவின்போது இசைக்கப்பட்ட வந்தே மாதரம் பாடல் எனது கண்களில் தண்ணீரை வரவழைத்து விட்டன. யாரையாவது கட்டிப் பிடித்து அழ வேண்டும் போல இருந்தது. அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்பட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதேபோல பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்களும் இந்திய அணியினரை வாழ்த்தியுள்ளனர்.