கணவன் கொடுமை தாங்க முடியாமல் மகனைக் கொன்று ஆசிரியை தற்கொலை

நாமக்கல் மாவட்டம் கங்கா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் கிருபாகரன். கால்நடை மருத்துவக் கல்லூரி இணை பேராசிரியர். இவரது மனைவி சுதா திருமகள். அலங்காநத்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியை. இவர்களின் மகன் அகில்.
நேற்று முன்தினம் காலை பிரகாஷ் கிருபாகரன் கல்லூரிக்குச் சென்று விட்டார். சுதாதிருமகள் உடல் நிலை சரியில்லாததால் பள்ளிக்குச் செல்லவில்லை. மகனையும் பள்ளிக்கு அனுப்பவில்லை.
கல்லூரியில் இருந்து மதியம் வீடு திரும்பிய பிரகாஷ் வீட்டு கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருப்பதை பார்த்தார். ஜன்னல் கண்ணாடியை உடைத்தபோது வீட்டுக்குள் மனைவியும், மகனும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் டி.எஸ்.பி. வேலன், இன்ஸ்பெக்டர் முத்தமிழன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருவரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது சுதா எழுதிய டைரி கிடைத்தது. அதில் 3 பக்கங்கங்களில் கணவன் தன்னை கொடுமைபடுத்தியது குறித்து அவர் தனது கைப்பட எழுதி வைத்திருந்தார்.
சுதா திருமகள் சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த மல்லிகுந்தத்தைச் சேர்ந்தவர். கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ராஜேந்திரனுடன் முதல் திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்தன.
திருமணமான 10 ஆண்டுகளுக்கு பிறகு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர். அதன்பிறகு அதே ஊரைச் சேர்ந்த பிரகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிரகாஷுக்கு நாமக்கல் கால்நடை கல்லூரியில் வேலை கிடைத்தவுடன் மேச்சேரியில் இருந்து நாமக்கல் வந்து விட்டனர். பிரகாஷ் அடிக்கடி சுதாவின் முதல் திருமணத்தைப் பற்றி பேசி மனரீதியாக டார்ச்சர் செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கடந்த 12-ம் தேதி இரவு ஏற்பட்ட பிரச்சனையால் மனவேதனை அடைந்த சுதா நேற்று முன்தினம் காலை தனது குழந்தையை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications