அதிமுக ஆர்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த அதிமுக மகளிர் அணி பிரமுகருக்கு அடி
மதுரை: மதுரையில் நடைபெறவிருக்கும் அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு நோட்டீஸ் கொடுத்து அழைப்பு விடுத்த அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளருக்கு அடி உதை விழுந்தது.
மதுரை ரிங் ரோட்டில் வரும் 18-ம் தேதி அதிமுக சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நெல்லை மாவட்ட அ.தி.மு.க. மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மதுரை வந்தார். அங்கு அவர் மேலமாரட் வீதியில் ஆர்பாட்ட நோட்டீஸ் கொடுத்து அனைவரையும் ஆர்பாட்டத்திற்கு அழைத்தார்.
அப்போது அவரை வழிமறித்த இரண்டு பேர் நோட்டீஸ்களை பறித்துக் கொண்டதோடு அவரை அடித்து உதைத்தனர். மேலும், பிளேடால் அவரது நெற்றியில் கீறினர். இதனால் புவனேஸ்வரி மயங்கி கீழே விழுந்தார். பின்பு புவனேஸ்வரியை தாக்கியவர்கள் தலைமறைவாகி விட்டனர்.
படுகாயமடைந்த புவனேஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி திலகர்திடல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.