காமன்வெல்த் ஊழல்-கல்மாடி உள்ளிட்ட 20 பேர் மீதான புகார்கள் குறித்து விசாரணை
காமன்வெல்த் போட்டிகள் முடிந்த கையோடு இந்த விசாரணை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக ஆடிட்டர் ஜெனரல் வி.கே.சுங்க்லு தலைமையிலான குழுவை மத்திய அஏரசு அமைத்துள்ளது. இந்த குழு மூன்று மாதங்களில் தனது விசாரணை அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிக்கும்.
காமன்வெல்த் போட்டி தொடர்பான ஒவ்வொரு நடவடிக்கையையும் அது ஆய்வு செய்யப் போகிறது. எதிலெல்லாம் முறைகேடு நடந்துள்ளது என்பதை தீவிரமாக கண்ணில் விளக்கெண்ணை ஆராயப் போகிறார்கள்.
மொத்தம் 20 பேர் குறித்து தீவிர விசாரணை நடைபெறவுள்ளது. இதில், போட்டி அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி, டெல்லி வளர்ச்சி ஆணையத் தலைவராக உள்ள துணை நிலை ஆளுநர் தேஜிந்தர் கண்ணா, முன்னாள் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர் ராமச்சந்திரன், ஒருங்கிணைப்புக் குழு நிதிக் கமிட்டி தலைவர் சதுர்வேதி, மத்திய நிதியமைச்சக கூடுதல் செயலாளர் உள்ளிட்டோரும் அடக்கம். கேம்ஸ் வில்லேஜை தயாரிப்படுத்தியது டெல்லி வளர்ச்சி ஆணையம் என்ற வகையில், அதன் தலைவராக உள்ள துணை நிலை ஆளுநரையும் கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
காமன்வெல்த் போட்டி தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே விளையாட்டு அமைச்சகம் சரிவர செயல்படவில்லை என்று கூறப்படுவதால் விளையாட்டு அமைச்சக சர்வதேச விளையாட்டுப் பிரிவு இணைச் செயலாளர் ராகுல் பட்நாகரும் கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
போட்டி முழுக்க குழப்பத்தில் விழ முக்கியக் காரணமாக கருதப்படுபவர் சுரேஷ் கல்மாடி. இவரைத்தான் தற்போது பிரதமர் குற வைத்திருப்பதாக கருதப்படுகிறது. போட்டி முடிவடைந்ததும், பதக்கம் வென்ற இந்திய வீரர், வீராங்கனைகளை நேரில் அழைத்துப் பாராட்டினார் பிரதமர் மன்மோகன் சிங். இந்த நிகழ்ச்சிக்கு கல்மாடிக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
விரைவில் காமன்வெல்த் போட்டி தொடர்பான நிதி முறைகேடுகள் உள்ளிட்ட அனைத்தும் வெளிச்சத்திற்கு வரும் எனத் தெரிகிறது.