கத்தார் சிறையில் உள்ள 32 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு மீனவர் அமைப்புகள் கண்டனம்
கன்னியாகுமரி: கத்தார் நாட்டு சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 32 பேரை மீட்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசுக்கு மீனவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கத்தார் நாட்டுக் கடல் பகுதிக்குள் அவர்கள் நுழைந்ததால் அவர்களை கத்தார் நாட்டு கடலோரக் காவல் படையினர் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களில் 18 பேர் கடையப்பட்டனத்தைச் சேர்ந்தவர்கள். 14 பேர் குமரிமாவட்டம் இனையம், முட்டம், பெரியவிளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். அனைவரும் சவூதி அரேபியாவில் பணியாற்றி வருகின்றனர்.
ஆறு படகுகளில் கத்தார் கடல் பகுதியில் இவர்கள் சென்றபோது கைது செய்யப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 10-ம் தேதி அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
32 பேரையும் மீட்க அவர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்தின் உரிமையாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மீனவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மீன அமைப்புகள் தமிழக அரசுக்கு மனு அளித்தன. ஆனால் மனு அளிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது.
கத்தார் நாட்டு சிறையில் சிக்கித் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்காத மாநில அரசுக்கு பல்வேறு மீனவ அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.