முல்லைப் பெரியாறு அணை-டிச. 17 முதல் 19 வரை ஆய்வு
அணையின் பாதுகாப்பு குறித்து இக்குழு ஆய்வு செய்யவுள்ளது. முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான இக்குழுவில் கேரளாவின் சார்பில் முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், தமிழகத்தின் சார்பில் முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் ஆகியோர் பிரதிநிதிகளாக உள்ளனர். இவர்கள் தவிர மத்திய அரசின் சார்பில் நீர்வளத்துறை முன்னாள் செயலாளர் தத்தே, மத்திய நீர் ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் டி.கே.மேத்தா ஆகியோர்இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து தமிழகப் பிரதிநிதியான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் கூறுகையில், சில முக்கியப் பிரச்சினைகள் குறித்து கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. இது 3வது கூட்டமாகும். இக்கூட்டத்தில் இரு மாநிலங்களிடமிருந்தும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் தமிழக பக்கத்தில் ஆய்வு நடத்தப்படும். பின்னர் கேரள பக்கத்தில் ஆய்வு நடத்தப்படும்.
அதி நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும். அணையின் பலம், பாதுகாப்பு குறித்து விரிவான ஆய்வாக இது மேற்கொள்ளப்படும் என்றார்.