திருப்பூரில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டவர் கைது-4 பேருக்கு வலைவீச்சு
திருப்பூர்: பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ.1,000, ரூ.500 கள்ள நோட்டுகளை திருப்பூர் மற்றும் சென்னையில் புழக்கத்தில் விட்டவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் பொம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் ( 30). திருப்பூர் கே.வி.ஆர்.நகரில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
இவரது கடைக்கு வந்த ஒரு வாலிபர் ரூ. 1,000 நோட்டை கொடுத்து 5 பாக்கெட் சிகரெட் கேட்டார். ரூபாய் நோட்டை பார்த்து சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் கே.வி.ஆர். நகரில் வாடகைக்கு குடியிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த குருஜித் (23) என்பவர் கள்ள ரூபாய் நோட்டை புழக்கத்தில் விடுவது தெரிய வந்தது.
இதனையடுத்து குருஜித்தை கைது செய்து, அவர் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்த போது அங்கு பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட ரூ.1,000, ரூ.500 கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது அறையில் இருந்து 6 ரூ. 1,000 கள்ள நோட்டுக்களும், 84 ரூ. 500 ரூபாய் கள்ளநோட்டுகளும் கைப்பற்றப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ. 48 ஆயிரமாகும்.
மேலும் புழக்கத்தில் விட்ட ரூ. 1 3/4 லட்சம் கள்ள ரூபாய் நோட்டை போலீசார் கைப்பற்றினர்.
குருஜித்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திய போது, மேற்குவங்காளத்தைச் சேர்ந்த கிரி, மாருக், பீகாரைச் சேர்ந்த சாதிக், அக்பர், பாபர் ஆகியோர் கூட்டுச்சேர்ந்து திருப்பூரில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
போலீஸ் விசாரணையில் இந்த கள்ள ரூபாய் நோட்டுகள் பாகிஸ்தானில் இருந்து நேபாளம் வழியாக பீகார் மாநிலத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications