செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை அமைப்பதில் சிக்கல் : பணிகள் தாமதம்
தென்மலை: செங்கோட்டை-புனலூர மீட்டர்கேஜ் பாதையை அகற்றிவிட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பாதையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் செங்கோட்டையில் இருந்து கேரள மாநிலம் புனலூர் வரை மொத்தமுள்ள 48 கி.மீ. மீட்டர்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. இதற்காக அப்பாதையில் இயக்கப்பட்ட ரயில்கள் கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. புனலூர்-செங்கோட்டை இடையே 48 கி.மீ. தூரத்திற்கான பணிகள் தற்போது துவங்க உள்ளன. இதில் ரயில்வே பொறியியல் பிரிவு மதுரை, எர்ணாகுளம், திருவனந்தபுரத்தில் எந்த பொறியியல் பிரிவிடம் எவ்வளவு கி.மீ. தூரப் பணிகளை ஒப்படைப்பது என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
ஏற்கனவே முதல்கட்டமாக கொல்லம்-புனலூர் பாதை திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் செயல்படும் பொறியியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோல் இரண்டாம் கட்டத்திற்கான பாதை பணிகளும் அதே பொறியியல் பிரிவிடம் ஒப்படைக்க உத்தேசிக்கப்பட்டது. ஆனால் செங்கோட்டையில் இருந்து எடமண் ரயி்ல் நிலையம் வரை 40 கி.மீ. தூரத்திற்கான பாதை அமைக்கும் பணிகளை மதுரை கோட்டத்தில் செயல்படும் பொறியியல் கட்டுமான பிரிவுக்கும், எடமண் ரயில் நிலையத்தில் இருந்து கொல்லம் ரயில் நிலையம் வரையிலான மீதமுள்ள 8 கி.மீ. தூரமுள்ள பாதை பணிகளை எர்ணாகுளத்தில் உள்ள பொறியியல் கட்டுமான பிரிவுக்கும் பிரித்து ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் சிக்கல் இருந்து வந்த நிலையில் அதை ரயில்வே நிர்வாகம் மறைத்து விட்டு மீட்டர்கேஜ் ரயில்களை நிறுத்தியது. இப்புதிய உத்தரவால் பணிகளை ஒப்படைப்பதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. எனவே அகல ரயில் பாதை அமைப்பதில் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.