ஹெட்லியின் மனைவிகள் சொன்னதை இந்தியாவிடம் மறைத்ததா அமெரிக்கா?

இதை இந்தியாவிடம் அமெரிக்கா தெரிவிக்கவில்லை என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதை அமெரிக்கா மறுத்துள்ளது.
மும்பையில் 2008 நவம்பர் 26ல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 166 பேர் உயிர் இழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட அமெரிக்காவில் வசித்த பாகிஸ்தான் தீவிரவாதி ஹெட்லி சிக்காகோவில் பிடிபட்டு உள்ளான்.
அவனிடம் அமெரிக்க அதிகாரிகளின் அனுமதியின் பேரில் இந்திய விசாரணை அதிகாரிகளும் விசாரணை நடத்தி உள்ளனர்.இந்த விசாரணையின் போது ஹெட்லி பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு உள்ளான்.
குறிப்பாக மும்பைத் தாக்குதலுக்கு மூளையாக இருந்த திட்டம் வகுத்துக் கொடுத்ததை ஒப்புக் கொண்டு உள்ளான். டேவிட் ஹெட்லிக்கு மூன்று மனைவிகள். இவர்களில் ஒருவர் மொராக்காவைச் சேர்ந்தவர். இளம் வயதினரான இவர் ஹெட்லியின் தாக்குதல் திட்டம் பற்றி அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை ஹெட்லியின் மனைவி அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் இதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படவில்லை என்று தெரிகிறது.
ஏனெனில் இந்த தகவல்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மறுத்து உள்ளது. தங்களது கூட்டாளி நாடான பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டதற்கு ஆதாரம் கிடைத்து விடும் என்பதால் அமெரிக்க அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் விட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது பற்றிய தகவல்களையும் இந்தியாவுக்குத் தெரிவிக்கவில்லை என்று கருதப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் மைக் ஹாமர் வெளியிட்ட அறிக்கையில், "தீவிரவாத தாக்குதல் பற்றிய தகவல்களை 2008ல் இந்தியாவுக்கு அவ்வப்போது தெரிவித்துக் கொண்டுதான் இருந்தோம். ஆனால் மும்பைத் தாக்குதல் பற்றிய நேரம் மற்றும் தாக்குதல் நடத்தப்போகும் இடம் பற்றிய தகவல் கிடைத்து இருந்தால் அதை முன்கூட்டியே இந்தியாவுக்கு தெரிவித்துத்தான் இருப்போம்' என்றார்.
இதற்கிடையில் ஹெட்லியின் அமெரிக்க மனைவியும் அவனைப் பற்றிய திடுக்கிடும் தகவல்களை பொது நலன் கருதி அமெரிக்காவின் எப்பிஐ யிடம் தெரிவித்ததாக நியூயார்க்கில் புலனாய்வுப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இது தவிர பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கங்களுடன் ஹெட்லிக்கு இருந்த தொடர்பு பற்றி அமெரிக்காவின் புலனாய்வு அமைப்புக்கு முன்கூட்டியே தெரியும் என்றும் இந்த தகவல் இந்தியாவுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும் செய்தி வெளியிட்டு இருந்தது.
இதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் திமோதி ரோமர் கூறுகையில், இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும்நம்பகமான தகவல்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டோம். டேவிட் ஹெட்லி பற்றி தற்போது வெளியாகி இருக்கும் தகவல் பற்றி உறுதியாக தெரிந்து கொண்ட பிறகே கருத்து தெரிவிக்க முடியும், என்றார்.












Click it and Unblock the Notifications