உபியில் சட்டவிரோத ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிப்பு: ஆயுதங்கள் பறிமுதல்
முசாபர்நகர்: உபி மாநிலம் டிடோடா என்னும் கிராமத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அங்கிருந்த ஏராளமான ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
அந்த தொழிற்சாலையில் இருந்து 12 நாட்டுத் துப்பாக்கிகள், ஏராளமான நீள் துப்பாக்கிகள், பீப்பாய்கள் மற்றும் முழுமையாக தயாரிக்கப்படாத ஆயுதங்களையும் நேற்று கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக பின்டு என்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது கூட்டாளிகள் தப்பித்துவிட்டதாக எஸ்.பி. ஆகாஷ் குல்ஹேரி கூறினார்.
விசாரணையில் இந்த ஆயுதங்களை அம்மாநிலத்தில் வரவிருக்கும் பஞ்சாயத்து தேர்தலின்போது விநியோகம் செய்வதற்காக தயாரித்ததாக பின்டு தெரிவித்தார்.
இதற்கிடையே பானேர் கிராமத்தில் உள்ள வயலில் இருந்து 5,424 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதை பஞ்சாயத்து தேர்தல் சமயத்தில் விநியோகம் செய்வதற்காகத் தான் பதுக்கி வைத்திருந்தனர் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால் இந்த சாராய சம்பவம் குறித்து யாரும் கைது செய்யப்படவில்லை.