கடையத்தில் 2 வயது குழந்தை கழுத்தை அறுத்து கொலை : தடுத்த தாய்க்கு கத்தி குத்து
கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆசிக். இவரது மனைவி தபசுன். இவர்களுக்கு நிவாஸ் என்ற 2 வயது ஆண் குழந்தை இருந்தது. ஆசிக் பெங்களூரில் பலசரக்கு கடை வைத்துள்ளார். மனைவியும், மகனும் மட்டும் கடையத்தில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் ஆசிக் வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த செல்லப்பா மகன் மணி என்பவர் வந்தார். தபசுனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். அதற்கு அவர் தண்ணீர் இல்லை என்று கூறியுள்ளார்.
அப்போது அருகில் நின்ற குழந்தை நிவாஸை தூக்கிய மணி, தான் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்தார். கதறித் துடித்த தபசுன் குழந்தையை காப்பாற்ற முயன்றபோது அவரின் கழுத்திலும் மணி கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தில் குழந்தை பரிதாபமாக இறந்தது. தபசுன் படுகாயம் அடைந்தார். உடனே பயந்து போன மணி தனது கழுத்தையும் கத்தியால் அறுத்துக் கொண்டு அதே இடத்தில் சரிந்தார். அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர்.
தகவல் அறிந்ததும் கடையம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காயமடைந்த தபசுனை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பை டி.எஸ்.பி. முத்து சங்கரலிங்கம் மற்றும் கடையம் போலீசார் மணியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.













Click it and Unblock the Notifications