பட்டாசு ஆலை விபத்து : குழந்தை பலி- ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
நெல்லை: சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் அழகுநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் தங்கபாண்டி. இவரது மனைவி காந்திமதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ரட்சகன் என்ற ஆண் குழந்தை இருந்தது. இருவரும் குருவிகுளம் அருகே உள்ள வாகைகுளத்தில் மணிராம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி காந்திமதி, தங்கபாண்டி ஆகியோர் குழந்தையுடன் பட்டாசு தொழிற்சாலைக்கு சென்றனர். அங்குள்ள வேப்பமரத்தடியில் தொட்டில் கட்டி குழந்தையை தூங்க வைத்துவிட்டு இருவரும் பணியில் ஈடுபட்டனர். அப்போது தொழிற்சாலையில் காயவைக்கப்பட்டிருந்த வெடிகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தை ரட்சகன் படுகாயம் அடைந்து இறந்தது.
இதையடுத்து காந்திமதி கொடுத்த புகாரின்பேரில் குருவிகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த விருதுநகரைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் பீடி குடித்துவிட்டு நெருப்பை அணைக்காமல் போட்டதால் வெடிவிபத்து ஏற்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து சக்திவேல், மணிராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) பிரபுதாஸ் சக்திவேலுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், மணிராமுக்கு ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.