2 கள்ளக் காதலிகளை கொன்று காவலர் தற்கொலை : நெல்லை, குமரியில் பரபரப்பு
நெல்லை: மணிமுத்தாறு பெண் ஏட்டு உள்பட 2 கள்ளக் காதலிகளை கொன்று நெல்லை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். தூத்துக்குடியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி. மணிமுத்தாறு சிறப்பு காவல்படை 9வது பட்டாலியனில் ஏட்டாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சுதர்சன், சுமித்ரா என்ற குழந்தைகள் உள்ளனர். மணிமுத்தாறில் தங்கியிருக்கும் இவருக்கும் பட்டாலியனில் உள்ள பண்டகசாலை பிரிவில் வேலை செய்யும் கோபாலசமுத்திரம் அருகேயுள்ள கொந்தன்குளத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற காவலருக்கும் இடையே கள்ள தொடர்பு இருந்தது.
திருமணத்திற்கு முன்பே அவருடன் பழக்கம் இருந்ததால் திருமணத்திற்கு பின்பும் அவர்களது உறவு நீடித்து வந்தது. இருவரும் அடிக்கடி பல இடங்களுக்கு கணவன், மனைவி போல் சென்று வந்தனர். இசக்கிமுத்துவுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் உமா மகேஸ்வரிக்கு அங்குள்ள மேலும் சில காவலர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த விபரம் இசக்கிமுத்துவுக்கு தெரிந்து ஆத்திரமடைந்தார். தன்னைத் தவிர வேறு யாருடனும் உறவு கொள்ளக் கூடாது என்று கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த உமா மகேஸ்வரி நேற்று காலையில் அங்குள்ள துப்புரவு தொழிலாளர் குடியிருப்பு அருகே அரை நிர்வாண கோலத்தில் ரத்தகாயங்களுடன் பிணமாகக் கிடந்தார்.
அவர் பலாத்காரம் செய்யப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தெரிகிறது. தகவல் அறிந்ததும் அம்பை டி.எஸ்.பி. முத்து சங்கரலிங்கம், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே இசக்கிமுத்து நேராக நாகர்கோவில் அருகேயுள்ள ஸ்ரீபுதபாண்டிக்குச் சென்றார். அங்கு பச்சமுத்து மனைவி கீதா என்பவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளிநாட்டில் வேலை பார்க்கும் பச்சமுத்துவுக்கு ஸ்ருதி, திவாகர், பிரபாகர் (இரட்டை குழந்தைகள்) என்ற 3 குழந்தைகள் உள்ளனர். பச்சமுத்து திருமணம் முடிந்து மனைவி குழந்தைகளுடன் அம்பாசமுத்திரத்தில் வசித்து வந்தார்.
இசக்கி்முத்து உறவினர் என்பதால் அவரது வீ்ட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார். அப்போது கீதாவிடமும் அவருக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. கடந்த 6 மாதத்திற்கு முன் கீதா பூதபாண்டியில் குடியேறினார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே கீதாவையும் இசக்கிமுத்து சுட்டுக் கொன்றதாக தெரிகிறது. இது தொடர்பாக பூதபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லை, குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.