சென்னையில் 2 மணி நேரம் கொட்டிய மழை... சாலைகளில் வெள்ளம்!
வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில் வங்க கடலில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக அவ்வப்போது லேசாக மழை பெய்தது.
சென்னையில் நேற்று காலை சைதாப்பேட்டையில் அரை மணி நேரம் மழை பெய்தது. அதன்பிறகு வெயில் அடிக்க தொடங்கியது. பின்னர் மாலையில் மீண்டும் வள்ளுவர் கோட்டம் அருகே மேகமூட்டங்கள் திரண்டு மழை பெய்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. காலை 6 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் மழை பெய்ததால் ரோடுகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடியது.
இதனால் தாழ்வான பகுதிகளிலும் பள்ளங்களிலும் மழைநீர் தேங்கி கிடந்தது. நுங்கம்பாக்கம் பகுதியில் பெய்த மழையால் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதேபோல் கோயம்பேடு பஸ்நிலையம் முன்பு 100 அடி ரோட்டிலும் மழைநீர் தேங்கி முட்டளவுக்கு நின்றதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
அம்பத்தூர், புதூர் பகுதியிலும் ரோடு முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றதால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல புரசை வாக்கம், அயனாவரம், வியாசர்பாடி உள்பட பல பகுதிகளிலும் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்த மழை இன்று மாலையிலும், இரவிலும் நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று காலை நுங்கம்பாக்கத்தில் 4.2 மி.மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 25.8 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.