"தமிழ் ஈழம் மலர தீக்குளித்த என் அண்ணனின் கனவு நிறைவேறவில்லையே''-முத்துக்குமாரின் தங்கை வேதனை

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்படுவதாக நேற்று காலையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து சென்னை பத்திரிக்கையாளர் மன்ற வளாகத்தில் நேற்று மாலையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர், தேசிய விடுதலை இயக்கம், தமிழர் தேசிய பொதுவுடைமை கட்சி, பெண்கள் அமைப்பினர், கவிஞர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்பட ஏராளமான அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கையெழுத்திட்டனர்.
'கனவு நிறைவேறவில்லையே'
முதல் கையெழுத்தை ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த முத்துக்குமாரின் சகோதரி தமிழரசி போட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில், "தனி ஈழம்' என்ற அவருடைய கனவு இன்றும் நிறைவேறாமல் உள்ளது. அவருடைய கனவு நிறைவேற எல்லோரும் இன உணர்வுடன் போராட வேண்டும்.
முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுதலை பெற வேண்டும். இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும்..", என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கையெழுத்திட்டு பேசும்போது, "விடுதலைப்புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும். இதற்காக எல்லோரும் இதில் கையெழுத்து போட்டு தங்கள் ஆதரவை தெரிவிக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications