தமிழக அமைச்சர்கள் சொத்துவிவரத்தை வெளியிட வேண்டும்! - காங்கிரஸ் 'குண்டு'
மதுரை: தமிழக அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ்.
மேலும் தற்போது தமிழக மக்கள் விரும்புவதெல்லாம் ஆட்சி மாற்றம்தான் என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் காங்கிரசார் மத்திய அரசின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ளனர்.
அப்போது மதுரையில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கடந்த 43 ஆண்டு காலமாக தமிழகத்தில் திராவிட கட்சிகளே ஆட்சி செய்து வருகிறது. ஆனால் திராவிட ஆட்சிகளின்போது பொது மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை.
கடந்த இரண்டு நாட்களாக மதுரை பாராளுமன்றத் தொகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக நாங்கள் கிராமப்புரங்கள் வழியாக செல்லும்போது, மக்கள் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கூறுகின்றனர்.
மத்திய அரசின் பல நல்ல திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு செல்லவில்லை. இதை மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளனர்.
மேலும், தமிழக அமைச்சர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும். மக்களின் விருப்பமே இளைஞர் காங்கிரசின் விருப்பம்" என்றார்.
சமீபத்தில்தான் சோனியா காந்தி தமிழகம் வந்து போயிருக்கும் நிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜின் இந்த பேட்டி திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications