புலிகள் மீதான தடை நீங்கும் வரை போராடுவோம்! - வைகோ

விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ததற்கு போதிய காரணங்கள் இருகின்றனவா, இல்லையா என்பதை விசாரிப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் மத்திய தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பாயத்தின் கூட்டம் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகையில் காலை 11 மணிக்கு நடந்தது. இந்த கூட்டத்தில் தீர்ப்பாயத்தின் தலைவர், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் தலைமையில் 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த அமர்வின்போது நேரில் ஆஜரான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் இந்த விவகாரத்தில் தீர்ப்பாயத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மத்திய உள்துறை அதிகாரி பி.கே மிஸ்ராவிடம் குறுக்கு விசாரணை நடந்தது.
பி.கே. மிஸ்ரா, "விடுதலைப் புலிகள் ஆதரவு எல்லா மாநிலங்களிலும் பரவியிருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான சாட்சியங்கள் இருக்கின்றன. இந்த அமைப்பின் மூலம் பல கிளர்ச்சிகள் நடக்கின்றன. எனவேதான் தடை விதித்திருக்கிறோம். அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இந்த இயக்கத்திற்கு தடை உள்ளது என்றார்.
உடனே வைகோ, அதற்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்டார்.
தடை இல்லை என்பதற்கு உங்களுக்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்று கேட்டார் மிஸ்ரா. ஊடகங்களின் செய்திகள்தான் அதற்கு ஆதாரம் என்று சொன்னார் வைகோ.
பின்னர் மத்திய தீர்ப்பாயத்தின் மறு கூட்டம் சென்னையில் வரும் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "இந்த விசாரணை நம்பிக்கை தருகிறது. கடைசிவரை போராடுவோம். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் அதிகம் பாதிக்கப்பட்டவர் நெடுமாறன்தான். கடைசிவரை போராடி தடையை நீக்குவோம். அதுவரை ஓயமாட்டோம்", என்றார்.