கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு: விசாரிக்க நெல்லை டி.ஐ.ஜி-க்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை: கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.ஏ படித்து வருபவர் ரமேஷ்.
இவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னையும், எனது நண்பர்கள் அலெக்ஸ், ராஜ்குமார், கார்த்திக் ஆகியோரை கல்லூரியில் படிக்கும் 30 மாணவர்கள் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் எனது கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து போலீசார் சாதாரண பிரிவின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களை கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இது குறித்து விசாரித்து சரியான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய விசாரணை அதிகாரிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், காயம் அடைந்தவர்கள் டி.ஐ.ஜியை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications