ஐப்பசியில் 'அடை மழை' வருமா?

தமிழகத்தைப் பொறுத்தவரை தென் மேற்குப் பருவ காலத்தால் ஓரளவே மழை கிடைக்கும். அதேசமயம், வட கிழக்குப் பருவ மழைதான் நிறைய மழையைக் கொண்டு வரும்.
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி வலுத்து விடும். அதாவது ஐப்பசியில் அடை மழை என்பார்கள். ஆனால் இதுவரை வட கிழக்குப் பருவ மழை தொடங்குவதாக தெரியவில்லை. அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அதுவும் வெப்பச் சலனம் காரணமாக என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
தற்போது அக்டோபர் மாதமே முடியப் போகிறது. இந்த நிலையில் வட கிழக்குப் பருவ மழை எப்போது வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறுகையில்,
வழக்கமாக அக்டோபர் மாதம் 20-ந் தேதி அல்லது அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவோ அல்லது ஒரு வாரத்திற்கு பிந்தியோ வடகிழக்கு பருவமழை தொடங்கும். அடுத்த 2 நாட்களுக்கு தொடங்க வாய்ப்பில்லை.
வடகிழக்கு பருவமழை தொடங்குவது என்றால் தென்மேற்கு பருவமழை முடிய வேண்டும். இன்னும் தென்மேற்கு பருவமழை முடியவில்லை.
மேல்திசையில் இருந்து வீசும் நிலக்காற்று மாற வேண்டும். அதற்கு பதிலாக கடலில் இருந்து நிலத்தை நோக்கி காற்று வீச வேண்டும். கடலோர மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்ய வேண்டும். மேலும் கிழக்கு மத்திய வங்கக் கடலில் ஒரு குறைந்தழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அது மறைய வேண்டும்.
இந்த அறிகுறி இருந்தால்தான் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளது என்று அர்த்தம். எனவே இப்போதைக்கு இல்லை என்றார் அவர்.
எனவே தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தாமதமாகிறது என்பது உறுதியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications