லாரி மோதி கடம்பூர் தலைமை ஆசிரியர் பலி: மக்கள் சாலை மறியல்
நெல்லை: தாழையூத்து புறவழிச்சாலையில் டேங்கர் லாரி மோதியதில் அப்பகுதியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர் பலியானார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கர்நகர் தேவலாய தெருவைச் சேர்ந்தவர் அருள்ஜெகநாதன் மகன் அந்தோணி பால்ராஜ். இவர் கடம்பூர் தீர்த்தாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் பள்ளி முடிந்த பின்னர் பேருந்தில் ஊருக்கு திரும்பியுள்ளார். தாழையூத்து நிறுத்தத்தில் இறங்கியவர் நான்குவழிசாலையை கடந்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது மதுரையில் இருந்து குரும்பூருக்கு வேகமாக சென்ற ஒரு டேங்கர் லாரி தலைமை ஆசிரியர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருக்கு அந்தோணியம்மாள் என்ற மனைவியும், மேரி, அமல் என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். மதுரையைச் சேர்ந்த லாரி டிரைவர் கந்தசாமியை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் புறவழிச்சாலையில் திரண்டனர். சுமார் 15 நிமிடங்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தாழையூத்து
போலீசார் அங்கிருந்து பொதுமக்களை கலைந்துபோகச் செய்தனர்.