ஹஜ் விசாவால் சிக்கல்-சவூதி விமான நிலையத்தில் தவித்த ஆந்திர அமைச்சர் திரும்பினார்
ஹைதராபாத்: தூதரக விசாவில் செல்வதற்குப் பதிலாக ஹஜ் விசாவில் சவூதி சென்ற ஆந்திர மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சையத் முகம்மது அகமதுல்லா ஜெட்டா விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாமல் 3 நாட்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. தற்போது அவர் ஹைதராபாத் திரும்பி வந்து விட்டார்.
வந்தவர், தனக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என்றும், வேண்டும் என்றே தனக்கு எதிராக இந்த செய்தியை சில டிவி நிறுவனங்கள் பரப்பியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு ஆந்திர மாநில ஹஜ் பயணிகளுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக அகமதுல்லா சவூதி சென்றார். ஜெட்டாவில் ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் உம்ரா பயணம் மேற்கொண்டார். பின்னர் 2 நாட்களுக்கு முன்பு ஜெட்டா திரும்பினார். அங்கிருந்து ஹைதராபாத் திரும்புவதாக திட்டம்.
இந்த நிலையில், அமைச்சர் அகமதுல்லாவை ஜெட்டா விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவர் ஹஜ் விசாவில் வந்திருப்பதால், விதிமுறைப்படி 45 நாட்கள் சவூதியில் தங்கியிருக்க வேண்டும். அதை மீறி அவர் செல்ல முடியாது என்று கூறி விட்டனர். இதனால் ஜெட்டா விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டு விட்டது அகமதுல்லாவுக்கு.
கிட்டத்தட்ட 3 நாட்கள் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருக்கிறார் அகமதுல்லா. சவூதி அதிகாரிகளிடம் தான் இந்தியாவின் ஆந்திர மாநில அமைச்சர் என்று விளக்கிக் கூறியும் அகமதுல்லாவை அனுப்ப அதிகாரிகள் மறுத்துள்ளனர். பின்னர் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டுள்ளார் அகமதுல்லா. அவர்கள் சவூதி அரசுடன் இதுகுறித்துப் பேசியுள்ளனர்.
தூதரக விசாவில் செல்லாமல் ஹஜ் விசாவில் சென்றதால்தான் அகமதுல்லாவுக்கு இந்த சிக்கல் ஏற்பட்டு விட்டது. ஏன் தூதரக விசாவில் அவர் செல்லவில்லை என்றால், அமைச்சருடன் அவரது மகன் மற்றும் இருவரும் வந்துள்ளனர். இத்தனை பேரையும் கூட்டிச் செல்வதாக இருந்தால் தூதரக விசாவில் செல்ல முடியாது. இதனால்தான் ஹஜ் விசா மூலம் தனது மகன், உள்ளிட்டோரை அழைத்து வந்துள்ளார் அமைச்சர். அதுவே தற்போது சிக்கலாகி விட்டது.
ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அமைச்சர் அகமதுல்லா தனது பயணத்தை முழுமையாக முடித்து விட்டார். ஹைதராபாத் திரும்புகிறார் என்று ஆந்திர அரசு விளக்கியிருந்தது.
இந்த நிலையில், அகமதுல்லா தற்போது ஹைதராபாத் வந்து விட்டார். சர்ச்சை குறித்து அவர் கூறுகையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை. அதுபோன்ற செய்திகள் வதந்தியாகும். இந்த செய்தியைப் பரப்பிய டிவிகள் மீது வழக்கு தொடருவேன் என்று கூறியுள்ளார் அகமதுல்லா.












Click it and Unblock the Notifications