ஜெயப்பிரகாஷ் நாராயணனைப் போல ராகுல் காந்தி-காங். தலைவர் ஒப்பீடு
டெல்லி: நாட்டின் இளைஞர்கள் குறித்து முன்பு ஜெயப்பிரகாஷ் நாராயணன் கவலைப்பட்டார். இப்போது ராகுல் காந்தி அந்த இடத்தை நிரப்பியுள்ளார் என்று கூறியுள்ளார் பீகார் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மோகன் பிரகாஷ்.
ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்திரா காந்தியை எதிர்த்து தீவிரமாக அரசியல் புரிந்தவர். இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சிக்கு எதிராக நாடு முழுவதும் தீவிரமாக செயல்பட்டவர். இந்திரா காந்திக்கு எதிராக இயக்கமே நடத்தியவர். இந்த நிலையில், ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் ராகுல் காந்தியை பீகார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஒப்பிட்டுப் பேசியிருப்பதால் காங்கிரஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மோகன் பிரகாஷ் கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல் காந்தி, இளைஞர்களின் நலன், தேவைகள், எதிர்காலம் குறித்து பெரும் கவலையுடனும், அக்கறையுடனும் உள்ளார்.
நேருவுக்குப் பின்னர் குழந்தைகள், மாணவர்கள் நலன் குறித்து அக்கறை காட்டியவர் அப்துல் கலாம். அதேபோல ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்குப் பிறகு நாட்டின் இளைஞர்கள் குறித்து அக்கறை காட்டி வரும் ஒரே தலைவர் ராகுல் மட்டுமே.
பீகார் தேர்தல் பிரசாரத்தில் அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டவில்லை. மாறாக நாட்டின் வளர்ச்சி, இளைஞர்களின் எதிர்காலம் குறித்து மட்டுமே பேசி வருகிறார். இது பீகார் இளைஞர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பொறுக்க முடியாமல் ராகுல் காந்தி மீது எதிர்க்கட்சியினர் அவதூறாகப் பேசி வருகின்றனர் என்றார் பிரகாஷ்.












Click it and Unblock the Notifications