கோவில் நன்கொடை கேட்ட பஞ்சாயத்து தலைவருக்கு அரிவாள்வெட்டு
தூத்துக்குடி: கோவில் நன்கொடை கேட்ட பஞ்சாயத்து தலைவரை அரிவாளால் வெட்டிய இரண்டு நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவம் (53). இவர் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவராக இருந்து வருகிறார்.
இந்த பகுதியில் உள்ள கோவில் கொடை விழாவிற்காக ஒவ்வொரு வீட்டிலும் ரூ. 300 வரி வசூல் செய்யட்டது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (57) என்பவர் தன்னால் ரூ. 300 ரூபாய் வரி செலுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ஊர்க்கூட்டம் கூட்டி கிருஷ்ணனிடம் இருந்து கட்டாய வரிவசூல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணன் (38) ஆகிய இருவரும் சேர்ந்து பஞ்சாயத்து தலைவர் பரமசிவத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து பரமசிவத்தை பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து முறப்பநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.