கேரளாவில் பத்திரிக்கையாளர்கள் மீது தடியடி-இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: நீதிமன்ற வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை தாக்கிய விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வக்கீல் பினு என்பவரை போலீசார் தாக்கியதாக நேற்று முன்தினம் வக்கீல்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் வக்கீல்கள் திருவனந்தபுரம் எஸ்.பி. அலுவலகம் நோக்கி கண்டனப் பேரணி நடத்தினர்.
அப்போது திடீரென வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசார் மீது சிலர் கற்களை வீசினர்.
இதனால் போலீசார் தடியடி நடத்தினர். இதில் 3 வக்கீல்களும், 4 பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டனர். பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது குறித்து விசாரணை நடத்த டிஜிபிக்கு உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம் நகர போலீஸ் கமிஷனர் அஜித்குமார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி ஐ.ஜி. ஹேமசந்திரனிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதன் பேரில் திருவனந்தபுரம் பேட்டை இன்ஸ்பெக்டர் ஷாபு, ஆயுதப்படை கான்ஸ்டபிள் பிரகாஷ் ஆகியோரை ஐ.ஜி. சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications