என்.எல்.சி. தொழிலாளர்கள் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்-ஏ.ஐ.டி.யு.சி. குற்றச்சாட்டு
நெய்வேலி: என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஏஐடியுசி பொதுச் செயலாளர் எஸ். எஸ். தியாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த ஒரு மாதமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர நிர்வாக தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு சங்கத்திடம் ரகசிய உடன்பாடு செய்து கொண்டு தொழிலாளர்களின் போராட்டத்தை பிளவுபடுத்த முயற்சி செய்கிறது. ஆனால், அந்த சதி வெற்றி பெறவில்லை.
தமிழக முதல்வர் கருணாநிதி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் பிரச்சனைக்குத் தீர்வு காண பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறுவது பொறுப்பற்ற செயல். இது கண்டனத்திற்குரியது.
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு பேரணி, பொதுக் கூட்டம் நடத்தி மாவட்டம் தழுவிய ஆர்பாட்டத்தினையும் நடத்திய பிறகும் மத்திய அரசு தலையிடவில்லை.
இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கட்சியின் கடும் எதிர்ப்பையும், காவல்துறையின் அச்சுறுத்தலையும் மீறி பொது மக்கள், வணிகர்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது வரவேற்கத்தக்கது.
ஆளும் திமுக கட்சி தொழிலாளர்களின் போராட்டத்திற்கு எதிராகச் செயல்படுவதும், காவல் துறையின் அத்துமீறிய செயல்பாடும் தமிழக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.