தப்பிக்க போலீஸுக்கு ரூ.10 லட்சம் லஞ்சம்-ரவிசங்கரிடம் விசாரணை நடத்த முடிவு
நெல்லை: மாஜி எம்.எல்.ஏ.வும், இன்னாள் கொள்ளையருமான ரவிசங்கரை தப்பிவிக்க போலீசார் ரூ.10 லட்சம் பெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
விளாத்திகுளத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வைகோவை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனவர் ரவிசங்கர். எம்.எல்.ஏ.வாக இருந்தபோது ரவிசங்கருக்கு இலங்கையில் சில நபர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
இலங்கை நபர்களுடன் சேர்ந்து போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார். அதில் நல்ல வருமானம் கிடைத்ததால் அதனையே தொழிலாக செய்தார். மேலும் விளாத்திகுளம் கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்த அவர் வங்கியில் ரூ.28 லட்சம் வரை பணமோசடி செய்தார்.
இது தொடர்பாக தூத்துக்குடி வணிக குற்றவியல் போலீசார் அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்குகள் நெல்லை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருள் கடத்தியபோது ரவிசங்கர் போலீசில் சிக்கினார். சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் விளாத்திகுளம் கூட்டுறவு வங்கி பணமோசடி வழக்கு தொடர்பாக 31-8-2004ல் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டார்.
இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் 5 போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு அழைத்துச் சென்றனர். அப்போது ரவிசங்கர் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள உறவினரை பார்க்க வேண்டும் என்று கூறியதன்பேரில் அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் ரவிசங்கர் போலீசாரை காக்க வைத்துவிட்டு உறவினர் வீட்டின் பின்வாசல் வழியாக தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ரவிசங்கரை வேண்டுமென்றே தப்பவிட்டதாக இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர் தப்பிக்க ரூ.10 லட்சம் வரை போலீசாருக்கு லஞ்சம் கொடுத்ததாக அப்போது பரபரப்பாக புகார் கூறப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த ரவிசங்கர் கடந்த 19-ம் தேதி சென்னையில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் கொள்ளையடித்தபோது கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை தப்பிவிக்க ரூ.10 லட்சம் கொடுத்தது உண்மையா என காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications