பணியாளர்களுக்கு சம்பளம்... இழுத்தடிக்கும் ஏர் இந்தியா!

இதனால் விமானிகளும், பணியாளர்களும் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஏர் இந்தியா நிர்வாகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதால், அந்த நிறுவனத்துக்கு கணிசமான நிதி உதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இரு தவணைகளாக நிதியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளத்தின் பெரும்பான்மைத் தொகையை இன்னமும் வழங்கவில்லையாம்.
விமானிகளின் சம்பளத்தில் 80 சதவீதம் சிறப்பு அலவன்சுகளே என்றும் இதை கடந்த 5 மாதமாக ஏர் இந்தியா வழங்காமல் உள்ளதாகவும் விமான ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நிர்வாகப் பணியாளர்கள், விமான பொறியாளர்கள் என பலதரப்பு ஊழியர்களுக்கும் 5 மாதங்களாக இதே நிலைதான் என்கிறார்கள்.
"இத்தனைக்கும் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து விமான டிக்கெட்டுகளின் விற்பனை கணிசமாக உயர்ந்து, நிறுவனத்துக்கும் லாபம் கிடைக்க ஆரம்பித்துள்ளது. ஆனால் இந்த மாதமும் சம்பளம் 15 நாள் தாமதமாகவே கிடைக்கும் என்கிறார்கள். இது பண்டிகைக் காலம். இப்படி இழுத்தடித்தால் எப்படி?" என புகார் தெரிவித்துள்ளனர் பணியாளர்கள்.
இந்த நிலை தொடர்ந்தால், பணியாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரமாட்டோம் என நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட, உடனே, நவம்பர் 4-ம் தேதிக்குள் அனைத்து நிலுவைகளையும் தருவதாக உறுதியளித்துள்ளது ஏர் இந்தியா நிர்வாகம்.
"நிதிப் பற்றாக்குறை என்று புலம்பும் நிர்வாகம், இரண்டு சிஓஓக்களை ரூ 4.2 கோடி சம்பளத்தில் நியமித்துள்ளது. ஒரு தலைமைப் பயிற்சி அலுவலரை ரூ 1.2 கோடிக்கு நியமித்துள்ளது. ஆனால் இந்த நிறுவனத்தின் முதுகெலும்பான விமானிகள் மற்றும் பணியாளர்களுக்கு தரவேண்டிய சம்பளத்தைக் கூட முறையாகத் தர மறுப்பது ஏன்?" என்று கேட்டு நிர்வாகத்துக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர் ஏர் இந்தியா ஊழியர்கள்.












Click it and Unblock the Notifications