ராமர் பிறந்த அயோத்தி நிலத்தை பிரிக்க முடியாது-ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
பிருந்தாவன் (உ.பி.): ராமர் பிறந்த அயோத்தி நிலத்தை பிரிக்க முடியாது. அந்த சக்தி இந்த உலகத்தில் யாரிடமும் இல்லை என்று கூறியுள்ளார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.
உ.பி. மாநிலம் பிருந்தாவனத்தில்நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தை யாராலும் பிரிக்க முடியாது. அந்த சக்தி இந்த பூவுலகில் யாரிடமும் இல்லை.
ராமருக்கு அவர் பிறந்த இடத்தில் கோவில் கட்டுவதையும் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. அங்கு கோ்வில் கட்டுவது என்பது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை.
அயோத்தியில் ராமர்கோவில் இருந்தது என்பதை அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. அந்த இடத்தில் மாபெரும் ராமர் கோவில் அமையும் நாளை இந்துக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
நாட்டு மக்களை மன ரீதியாக சீர்குலைக்கும் எண்ணத்தில்தான் அங்கு இருந்த ராமர் கோவிலை இடித்துள்ளனர். அங்கு ராமர் கோவில் அமைவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.
ராமர் கோவில் வருவதற்கு அரசியல்வாதிகளும், அடிப்படைவாதிகளும் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர். இந்தச் சூழ்நிலை மாறினால்தான் கோவில் கட்ட முடியும் என்றார்.
உடன் இருந்த வி.எச்.பி.தலைவர் பிரவீன் தொகாடியா கூறுகையில், ராமர் பிறந்த இடத்தில் மசூதி கட்டுவது என்பதை ஏற்க முடியாது. அங்கு மிகப் பெரிய ராமர் கோவில் கட்டப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் விஎச்பி சர்வதேச தலைவர் அசோக் சிங்கால், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக எம்.பி. சித்து ஆகியோரும் கலந்து கொண்டனர்.