ஊழியர்களை போலீஸ் தாக்கியதால் கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்
கோவை: கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் இருவரை போலீஸார் தாக்கியதால், மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர்.
கோவை, செல்வபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வெளியே அமர்ந்து சிலர் மது அருந்தியுள்ளனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீஸார், கடை ஊழியர்கள் இருவரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அங்கு வைத்து ஊழியர்களை போலீஸார் தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து மாவட்ட கலெக்டரிடம் முறையிட டாஸ்மாக் ஊழியர்கள் முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து மாவட்டம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி ஊழியர்கள் ஸ்டிரைக்கில் குதித்தனர்.
கோவையில் மட்டும் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. பொள்ளாச்சி, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
கவுண்டம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் முன்பு திரண்ட 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஊழியர்களைத் தாக்கிய காவல்துறையினரைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் குதித்தனர். அவர்களுடன் டாஸ்மாக் அதிகாரிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படவே பிற்பகல் 12 மணியளவில் கடைகள் திறக்கப்பட்டன.