தமிழக மின்வாரியம் நவ. 1 முதல் மூன்றாகப் பிரிகிறது
சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளாக ஊசலாட்டத்தில் இருந்து வந்த நிலை முடிவுக்கு வருகிறது. தமிழக மின்வாரியம் நவம்பர் 1ம் தேதி முதல் மூன்று துறைகளாக செயல்படவுள்ளது.
கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஒரே துறையாக இருந்து வந்த மின்வாரியம் நவம்பர் 1ம் தேதி முதல் மூன்று தனித் தனிபிரிவுகளாக செயல்படும்.
தமிழ்நாடு மின்வாரியம் லிமிட்டெட், தமிழ்நாடு மின் விநியோகக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் என மூன்று தனிக் கழகங்களாக மின்வாரியம் பிரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியத் தலைவர் சி.பி.சிங் கூறுகையில், இந்த பிரிப்பால் நுகர்வோர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. பில்லிங் மட்டும் இனிமேல் மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் வழங்கும். மற்றவற்றை மற்ற இரு கழகங்களும் கவனிக்கும்.
மொத்தத்தில் உற்பத்தி, விநியோகம் உள்ளிட்டவை இனிமேல் திறம்பட செயல்பட முடியும். மூன்று கழகங்களும் தங்களுக்கென்று தனி நிதியைக் கையாளுவதால் தங்களது தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார்.
தற்போது மின்வாரியத்தின் நஷ்டம் ரூ. 3000 கோடியாக உள்ளது. இந்த நஷ்டத்தை இனி மூன்று நிறுவனங்களும் பகிர்ந்து கொள்ளும்.
மின்வாரியத்தில் தற்போது 83 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகத்திற்கு அனுப்படுவர். கிட்டத்தட்ட 12 ஆயிரம் பேர் டிரான்ஸ்மிஷன் கழகத்திற்கு அனுப்பப்படுவர்.












Click it and Unblock the Notifications