சென்னையில் பயங்கரம்-அடுக்குமாடிக் குடியிருப்பின் லிப்ட்டில் சிக்கி சிறுவன் பலி
சென்னை: சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பின் லிப்ட்டில் சென்ற பூ விற்கும் சிறுவன் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
சென்னை சூளைமேடு வட அகரம் ரோடு 1-வது தெருவை சேர்ந்தவர் மனோன்மணி. பூ வியாபாரி. இவரது மகன் காளீஸ்வரன். 13 வயதான காளீஸ்வரன், மாநகராட்சிப் பள்ளியில் 8வது வகுப்பு படித்து வந்தான்.
நெல்சன் மாணிக்கம் சாலையோரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார் மனோன்மணி. அப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு பூக்களை விற்றும் வருகிறார்.
நேற்று மாலை 6 மணியளவில் பள்ளி முடிந்து காளிஸ்வரன் தாயார் பூ வியாபாரம் பார்க்கும் நெல்சன் மாணிக்கம் சாலைக்கு வந்தான். அப்போது வாடிக்கையாளர்களுக்காக பூக்களை கட்டி கொடுத்து கொண்டிருந்த மனோன்மணி மகன் காளிஸ்வரனிடம் மல்லிகை பூவை கட்டி நெல்சன் சேம்பர் அபார்ட்மெண்டில் இருக்கும் பெண்மணி ஒருவரிடம் கொடுத்து வருமாறு கூறினார்.
இதை தொடர்ந்து சிறுவன் பூக்களை எடுத்துக்கொண்டு அந்த அபார்ட்மெண்டுக்கு சென்றான். முதல் மாடியில் உள்ளவர்களுக்கு பூக்களை கொடுத்து விட்டு, 3-வது மாடிக்கு செல்வதற்காக அங்கிருந்த லிப்டுக்குள் சென்றான். அது தானியங்கி லிப்ட் ஆகும்.
லிப்ட்டுக்குள் காளீஸ்வரன் சென்றபோது இடதுகாலை எடுத்து வைப்பதற்குள் லிப்ட் இயங்கத் தொடங்கியுள்ளது. இதனால் வலது கால் உள்ளேயும், இடது கால் லிப்ட்டுக்கு நடுவிலும் மாட்டிக் கொண்டது.
இதையடுத்து சிறுவன் அலறியுள்ளான். ஆனால் அபார்ட்மென்ட்டில் உள்ள அத்தனை வீடுகளில் இருந்தவர்களும் கதவைப் பூட்டி உள்ளே இருந்ததால் யாருக்கும் அந்த அப்பாவிச் சிறுவனின் குரல் கேட்காமல் போய் விட்டது. இதனால் சிறிது நேரத்திலேயே காளீஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தான்.
லிப்ட்டுக்குள் ஒரு கால் மாட்டிக் கொண்டதால் தொடைப் பகுதி வரை உடல் பாகம் கிழிந்து மிகவும் கோரமான நிலையில் பிணமாக தொங்கினான் காளீஸ்வரன். சிறிது நேரத்தில் லிப்ட்டும் முதல் மற்றும் 2ம் தளத்துக்கு இடையில் நின்று விட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதை அறிந்து அடுக்குமாடிக் குடியிருப்பின் வாட்ச்மேன் விரைந்து வந்து பார்த்தபோது காளீஸ்வரன் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அமைந்தகரை போலீஸார் விரைந்து வந்தனர். சிறுவனின் உடலை மீட்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் போராடி உடலை மீட்டனர்.












Click it and Unblock the Notifications