என்எல்சி ஸ்டிரைக் தொடர்ந்து நடைபெறும்-தொழிலாளர்கள் அறிவிப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதி ஸ்டிரைக்கை கைவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், என்எல்சி தொழிலாளர் சங்கங்கள் ஸடிரைக்கைத் தொடர்ந்து நடத்தப் போவதாக அறிவித்துள்ளன.
சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 19ம் தேதி முதல் என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் உடன்பாடு ஏற்படவில்லை. என்எல்சி நிர்வாகத் தரப்பில் உடன்பாடு காண்பதில் மெத்தனம் காட்டப்படுவதாக தொழிலாளர்கள் குற்றண் சாட்டி வருகின்றனர்.
அதேசமயம், திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் ஸ்டிரைக் தொடர்பாக நிர்வாகத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதையடுத்து அந்த சங்கத்தைச்சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் ஸ்டிரைக்கிலிருந்து விலகிக் கொண்டனர்.
ஆனால் திமுக தொழிற்சங்கம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மற்ற தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.
கடந்த 36 நாட்களாக நடந்து வரும் ஸ்டிரைக் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளியாகின.
இதனால் நிலைமை மேலும் சிக்கலாகியது. இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதி தொழிற்சங்கத்தினர் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்களிடம் போராட்டத்தை உடனடியாக கைவிடுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார்.
மேலும் தொழிலாளர்களிடம் முதல்வர் பேசுகையில்,தினக் கூலி ரூ. 40 அதிகரிக்கப்பட்டுள்ளது. சலவைப் படி ரூ. 15லிருந்து ரூ. 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ. 500 சிறப்பு ஊதியம் மற்றும் 8.33 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மனதில் கொண்டு போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து தாங்கள் கூடிப் பேசி போராட்டத்தைக் கைவிடுவது குறித்து முடிவெடுப்பதாக அறிவித்தனர்.
அதன்படி தொழிற்சங்கத்தினர் கூடி ஆலோசனை நடத்தினர். இதன் இறுதியில் எந்தவிதமான உறுதியான உறுதிமொழியும் தரப்படாத நிலையில் போராட்டத்தைக் கைவிடுவது கடினம் என்று கூறப்பட்டது. இதனால் ஸ்டிரைக் தொடர்கிறது.












Click it and Unblock the Notifications