இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து அணியை வாங்கும் கோழிப்பண்ணை நிறுவனம் வெங்கிஸ்!

இதன் மூலம், பிரிட்டிஷ் கால்பந்தாட்ட அணி ஒன்றை வாங்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையைப் பெறுகிறது வெங்கிஸ்.
புனே நகரை மையமாகக் கொண்டு இயங்கும் கோழிப் பண்ணை நிறுவனமான வெங்கிஸ், ரூ 320 கோடி செலவில் இந்த கிளப்பை வாங்குகிறது.
பிளாக்பர்ன் ரோவர்ஸ் கால்பந்தாட்ட அணி 135 ஆண்டு பழமையானது. வடக்கு இங்கிலாந்தில் உள்ள பிளாக்பர்ன் நகரை மையமாகக் கொண்டு இயங்குகிறது. மிகப்பிரபலமான கால்பந்து அணிகளுள் ஒன்று. ஆனால் சமீபகாலமாக கடன் சிக்கலில் தவித்து வந்தது.
இந்த அணியை வாங்குவது குறித்து வெங்கிஸ் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் ராவ் கூறுகையில், "வெங்கிஸ் புரமோட்டர்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கான நிதி ஆதாரமும் அவர்களிடம் உள்ளது. அடுத்த மாதம் அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிடும்" என்றார்.
பிளாக்பர்ன் ரோவர்ஸ்ஸின் தலைவர் ஜான் வில்லியம்ஸ் இதுபற்றிக் கூறுகையில், "இரு தரப்பு பேச்சுவார்த்தையிலும் திருப்தியான நிலை காணப்படுகிறது. நவம்பரில் இந்த கிளப் வெங்கிஸுக்கு கைமாறும்" என்றார்.
இங்கிலீஷ் பிரிமியர் லீக் ட்ராபிக்கான போட்டிகளில் 20 கால்பந்தாட்ட அணிகள் மோதுவது வழக்கம். இதில் பிளாக்பர்ன் ரோவர்ஸ் 14 வது இடம் வகிக்கிறது.
இங்கிலீஷ் பிரிமியர் லீக் போட்டி, உலகின் மிகப் பிரபலமான கால்பந்தாட்ட அமைப்பாகும். ஆண்டுக்கு 380 போட்டிகளை நடத்தும் இந்த லீக்கின் 2008-2009 ஆண்டு வருமானம் ரூ 14000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கவும், வரும் 2030-ல் நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்துவதற்கேற்ற சூழலை உருவாக்கவும், இந்திய நிறுவனங்கள் கால்பந்து அணிகளை வாங்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. குறிப்பாக முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோர் லிவர்பூல், நியூகேஸில் அணிகளை வாங்க முயற்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications