இந்தோனேஷியா: இயங்காமல் போன சுனாமி அலை எச்சரிக்கை கருவிகள்

கடந்த 2004ம் ஆண்டு இந்தோனேஷியாவை மிக பயங்கர நிலநடுக்கம் தாக்கி சுமார் 2 லட்சம் பேர் பலியாயினர். இதையடுத்து சுனாமி அலைகள் உருவானால் அது குறித்து முன் கூட்டியே எச்சரிக்கும் கருவிகள் கடலில் பொறுத்தப்பட்டன.
கடலில் மிதவைகளில் நிலை நிறுத்தப்பட்ட இந்தக் கருவிகள், கடலின் நீர் மட்டம் திடீரென உயரும்போது அது குறித்து தரைக்கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தரும். இதையடுத்து எச்சரிக்கை மணி ஒலிக்கப்பட்டு கடலோரப் பகுதி மக்கள் வெளியேற வகை செய்யப்பட்டது.
ஆனால், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் உதவியோடு பெரும் செலவில் வாங்கப்பட்டு பொறுத்தப்பட்ட இந்த அதிநவீன கருவிகள் கடந்த திங்கள்கிழமை சுனாமி அலைகள் தாக்கியபோது செயல்படவில்லை என்று இப்போது தெரியவந்துள்ளது.
இவை உரிய பராமரிப்பு இல்லாததால் செயல்படாமல் போனதாக புகார் கூறப்படுகிறது. ஆனால், இந்த மிதவைகள் சில கும்பல்களும் மீனவர்களும் சேதப்படுத்திவிட்டதால் தான் அவை இயங்காமல் போனதாக அரசு தெரிவித்துள்ளது.
இதனால் சுனாமி அலைகள் தாக்கி 10 கிராமங்கள் நீரில் மூழ்கி 233 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேரைக் காணவில்லை.
இதற்கிடையே இந்த கருவிகள் எச்சரிக்கை விடுத்திருந்தாலும் சுனாமி அலைகள் தாக்குவதற்குள் மக்கள் வெளியேறியிருக்க முடியுமா என்பது சந்தேகமே என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மென்டாவி, பகாய், சிபுரோ தீவுகளுக்கு அருகே கடலில் 50 கி.மீ தூரத்தில் தான் திங்கள்கிழமை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. அடுத்த 10 நிமிடத்தில் அலைகள் தாக்கிவிட்டன. இதனால் அவ்வளவு குறுகிய காலத்தில் இரவு நேரத்தில் அத்தனை மக்களும் தப்பியோடியிருக்கவும் வாய்ப்பில்லை என்கின்றனர்.












Click it and Unblock the Notifications