பெங்களூரில் புதுமணப் பெண் கொலை-தற்கொலைக்கு முயன்ற கொலையாளி சிக்கினான்

நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜெயசெல்வனின் மகள் மலர்விழிக்கு (24) விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனுக்கும் 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.
பாலசுப்பிரமணியம் பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுவதால் மனைவி மலர்விழியுடன் மைக்கோ லே அவுட்டில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினார்.
கடந்த 11ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மலர்விழி, கழுத்து அறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். அவரை பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சி நடந்துள்ளது தெரியவந்தது.
விசாரணையில் நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்த நவீன் (25) என்ற வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஹைதராபாத்தில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றும் நவீனும் மலர்விழியும் உறவினர்கள்.
மலர்விழியை திருமணம் செய்ய அவர் விரும்பியதாகவும் ஆனால் இந்தத் திருமணத்துக்கு பெண்ணின் பெற்றோர் மறுத்து விட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து நவீன் தான் மலர்விழியை கொலை செய்தார் என்று விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து நவீனை பிடிக்க பெங்களூர் போலீசார் பல தனிப் படைகளை அமைத்தனர். இதனால் நவீன் தலைமறைவானார்.
இந் நிலையில் நேற்று சென்னை மாம்பலம் போலீசாருக்கு தியாகராய நகர் மேன்சன் ஒன்றில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. தங்களின் மேன்சனில் தங்கியிருக்கும் ஒரு வாலிபர் மயங்கிக் கிடப்பதாக தகவல் தரப்பட்டது.
போலீசார் விரைந்து சென்று அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் ஒரு மருந்தை அதிக அளவில் குடித்து மயங்கியது மருத்துவர்கள் பரிசோதனையில் தெரிய வந்தது.
உரிய சிகிச்சை அளித்து அவரை மருத்துவர்கள் தெளிய வைத்தனர். பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் அவர், பெங்களூரில் மலர்விழி கொலை வழக்கில் தேடப்படும் நவீன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து நவீன் மீது தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடம் நவீன் அளித்துள்ள வாக்குமூலத்தில்,
மலர்விழியும் நானும் காதலித்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய மலர்விழி ஏமாற்றிவிட்டார். எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
கடந்த 11ம் தேதி மலர்விழி தனியாக இருந்தபோது வீட்டுக்குச் சென்றேன். என்னை ஏன் ஏமாற்றினாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டேன். காதலித்து ஏமாற்றியதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கத்தியால் குத்தி மலர்விழியை கொலை செய்தேன்.
பின்னர் அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்து தலைமறைவாக இருந்தேன்.எனது தாய்- தந்தையை பெங்களூர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவேதான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியுள்ளார்.
நவீன் கைது குறித்து பெங்களூர் மைகோ லேஅவுட் போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்தனர்.
இன்று நவீனை அவர்கள் பெங்களூர் அழைத்துச் செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications