கிலானி, அருந்ததி ராய் மீது வழக்கு பதிவு இல்லை: மத்திய அரசு
டெல்லி: காஷ்மீர் பிரிவினையை ஆதரித்துப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹூரியத் மாநாட்டுத் தலைவர் சையத் அலி ஷா கிலானி, எழுத்தாளர் அருந்ததி ராய் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்வதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை வேண்டும் என்று கிலானியும், அருந்ததி ராயும் டெல்லியில் அக்டோபர் 21ம் தேதி நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசினர்.
இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் மீது எந்த வகையான நடவடிக்கை எடுக்கலாம் என்ற ஆலோசனையை மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய சட்ட அமைச்சகத்திடம் கேட்டது.
'தேசத்துக்கு எதிராக அதிருப்தியுடன் இருத்தல்' என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம் என்று சட்ட அமைச்சகம் ஆலோசனை தந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி போலீசாருக்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கியது.
ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் காஷ்மீர் தொடர்பாக சர்வதேச அளவில் தேவையில்லாத செய்திகள் பரவும் என்பதால் வழக்குப் பதிவு செய்ய வேண்டாம் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.
பாஜக கண்டனம்:
இந் நிலையில் சட்ட விரோதமாகப் பேசியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் அதிகாரம் அரசுக்கோ, மத்திய உள்துறை அமைச்சருக்கோ, அமைச்சகத்துக்கோ கிடையாது என்று பாஜக கூறியுள்ளது.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின்கீழ் ஒருவரது பேச்சு அமைந்துள்ளது என சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு தகவல் வந்தால், அவர் விசாரணை மேற்கொள்வதைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
காஷ்மீர் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவில் உள்ள ராதா குமார், காஷ்மீர் ஆசாதி (சுதந்திரம்) தொடர்பாக விவாதம் நடத்துவது குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெறும் வகையில் திருத்தம் கொண்டு வர ஆலோசனை வழங்குவேன் என்று கூறியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
அமைதியாக செயல்பட வேண்டிய பேச்சுவார்த்தைக் குழுவினர் ஒருதலைப்பட்சமாக கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த 3 பேர் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என ஆலோசனை கூறுவதற்கு அல்ல.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது தான தனிநாடு கேட்கும் அளவுக்கு பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications