பாளை சிறையில் கட்டிடங்கள் மீது ஏறி நின்று கைதிகள் போராட்டம்
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் தங்களை பார்க்க வரும் உறவினர்களிடம் போலீசார் சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து கைதிகள் நேற்று முன்தினமும், நேற்றும் கட்டிடங்கள் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர்.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் 1500 பேர் உள்ளனர். இதில் தடை செய்யப்பட்ட அமைப்பினர் அடங்குவர்.
இங்கு சிறை கண்காணிப்பாளர் தலைமையில் ஒரு ஜெயிலர் மற்றும் 10 அதிகாரிகள், 400 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையில் கடந்த 3 ஆண்டுகளாக தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாகவும், இதற்கு உடந்தையாக சில காவலர்கள், அதிகாரிகள் செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளை பார்க்க அவர்களது உறவினர்கள் நேற்று வந்தனர். அவர்களை போலீசார் மற்றும் சிறை காவலர்கள் சோதனையிட்டனர். சிகரெட், பீடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர்.
பழங்கள், பி்ஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை மட்டுமே அனுமதித்தனர். இந்த கெடுபிடி சோதனை குறித்து கைதிகளிடம் உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிறை கைதிகள் 600-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை தங்களுக்கு வழங்கப்பட்ட இரவு உணவை சாப்பிட மறுத்து ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும் சில கைதிகள் மரங்கள் மீது ஏறி நின்று போராட்டம் நடத்தினர். 25-க்கும் மேற்பட்ட கைதிகள் புதிய கட்டிட குடிநீர் தொட்டி மீது ஏறி நின்று போலீசார் மற்றும் சிறை காவலர்களுக்கு எதிராக கோஷமிட்டனர். அவ்வழியாக சாலையில் சென்றவர்கள் இதை வேடிக்கை பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications