கனமழை... பட்டாசுக்கு செம கிராக்கி... அதிர வைக்கும் விலை உயர்வு!

நாடு முழுவதும் வெடி தேவையை சிவகாசி பட்டாசு ஆலைகள் பூர்த்தி செய்கின்றன. சிவகாசியில் மட்டும் பட்டாசு தொழில் மூலம் ரூ.1000 கோடிக்கு மேல் ஆண்டிற்கு கிடைக்கிறது. 10 நாள் முன்பு வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு பெரிய மற்றும் சிறிய நிறுவனங்களின் சரக்குகள் லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில் கடந்த 27-ம் தேதி சிவகாசியில் 21 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. நேற்று முன்தினம் மாலையும் கனமழை பெய்தது. 2 நாளாக மழை பெய்து வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கூடுதல் விலை கொடுத்தாலும் கம்பி மத்தாப்புகள், பேன்சி ரக வெடிகள் கிடைக்காததால் வியாபாரிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அதனால் சிறிய நிறுவனங்கள் பட்டாசுகள், கம்பி மத்தாப்புகள், புஸ்வானங்களைத் தயாரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் ஏராளமானோர் புதிதாக ஆர்டர் கொடுத்துள்ளனர். வெளியூர் வியாபாரிகள் சிவகாசியை முற்றுகையிட்டு வருகின்றனர். இதனால் சிறிய நிறுவனங்களின் பட்டாசு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கம்பி மத்தாப்பு 5 பண்டல் கொண்டது ரூ.300ல் இருந்து ரூ.450 வரை உயர்ந்துள்ளது. 5 எண்ணிக்கை கொண்ட கம்பி மத்தாப்பு ரூ.60 இருந்து ரூ. 90 ஆக உயர்ந்துள்ளது.
ரோல் வெடி, கேப் வெடிகள் கடையில் இல்லை. பேன்சி 2 இன்ச் வானவெடி ஒன்று ரூ. 60-ல் இருந்து ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. பிரமாண்ட பெரிய ரக பேன்சி வெடிகள் ரூ.120ல் இருந்து ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் அனைத்து வெடிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கனமழையினால் தயாரிப்பு முடங்கியதாலும், தீபாவளி நெருங்கி வருவதாலும், பட்டாசு விலை இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications